Tuesday 21 June 2016

நோய் வருவதற்கு முன்பே கட்டுப்படுத்தி விட பூண்டுக் கரைசல்!




கத்திரி, தக்காளி, வெண்டை, அவரை உள்ளிட்ட காய்கறிச் செடிகளில் நோய்த் தாக்குதல் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. இதை நோய் வருவதற்கு முன்பே கட்டுப்படுத்தி விட வேண்டும். இதற்கு மூலிகைப் பூச்சிவிரட்டி அதிமுக்கியம். புகையிலை, பூண்டு, பச்சை மிளகாய், வேப்பிலை, நொச்சி இலை இவை ஐந்தையும் சம அளவில் எடுத்து உரலில் போட்டு இடித்து, மூழ்கும் அளவு மாட்டுச் சிறுநீரில் (கோஜலம்) ஊறவைத்து, நன்றாகக் கொதிக்கவைத்து, பிறகு ஆறவைக்க வேண்டும். 10 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி வீதம் கலந்து பிஞ்சுப்பருவம் மற்றும் காய்ப்பருவம் ஆகிய இரண்டு பருவங்களில் செடிகள் நனையும்படி தெளிக்கலாம். செடிகளைத் தாக்கும் பூச்சிகளை விரட்டியடிக்கும் ஆற்றல், இந்த புகையிலை+பூண்டுக் கரைசலுக்கு உண்டு.

நொச்சி, வேம்பு, ஆடுதொடாஇலை (ஆடாதோடை), நிலவேம்பு, பப்பாளி இலை என கிள்ளினால், பால் வடியும் ஐந்து இலைகளையும் சம அளவில் சேகரித்து 2 லிட்டர் மாட்டுச்சிறுநீரில் (கோஜலம்) ஒரு நாள் முழுக்க ஊறவைத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும். பிறகு, 10 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி விகிதம் கலந்து, அதிகாலை அல்லது இளமாலை வேளைகளில் செடிகள் மீது தெளிக்கவேண்டும். தொடர்ந்து பிஞ்சுப்பருவம், காய்ப்பருவம் ஆகிய நாட்களில் தெளித்துவர, காய்ப்புழு, அசுவணி, இலைப்பூஞ்சணம் உள்ளிட்ட நோய்கள் அகன்று சீரான மகசூலைப் பெறலாம்.

Saturday 21 May 2016

இடுப்புச் சதை நீக்கும் 7 பயிற்சிகள் | How to Reduce Fat

இடுப்புச் சதை நீக்கும் 7 பயிற்சிகள்

டுப்புப் பகுதியில் கொழுப்பு அதிகரிக்கும்போது, தசைகள் டயர் போல மாறி, அழகைக் கெடுக்கும். பிடித்த உடையை அணிய முடியாமல், மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற கவலையில் திணறுவார்கள். இதற்கு, வீட்டிலேயே டம்பெல், மெடிசின் பால் போன்ற சிறிய உடற்பயிற்சிப் பொருட்களைப் பயன்படுத்தி, 15 மினிட்ஸ் வொர்க்அவுட் செய்தால் போதும். ஈஸியா ஃபிட்டாகலாம்.

மெடிசின் பால் ஓவர் ஹெட் (Medicine ball over head)
மெடிசின் பந்தை இரு கைகளாலும் வயிற்றுக்கு அருகே வைத்துக்கொள்ள வேண்டும். கைகளைத் தலைக்கு மேல் உயர்த்த வேண்டும். கைகள் காதை ஒட்டி இருக்கட்டும். இப்போது, உடலை இடது புறம் வளைத்து நிமிர்த்த வேண்டும். பின்னர்,  வலது புறமும் வளைக்க வேண்டும். வளையும்போது கை மூட்டுகள் மடங்கக் கூடாது. இது ஒரு செட். இப்படி மூன்று முறை செய்யலாம். 

பலன்கள்: உடலின் மேல் பகுதி முதல் கீழ் பகுதி வரை குறிப்பாக, இடுப்புத் தசைகளுக்கும் தொடைப் பகுதியில் உள்ள குவாட்ஸ், க்ளுட்ஸ், பின்னங்காலில் உள்ள காவ்ஸ் தசைகளுக்கும் நல்ல பயிற்சி. முழு உடலும் வலுவடையும்.

கெட்டில்பெல் சைடு கிரெஞ்ச் (Kettlebell Side Crunc
h)
கால்களை அகட்டிவைத்து, நேராக நிற்க வேண்டும். வலது கையில் கெட்டில்பெல்லைப் பிடித்துக்கொள்ள வேண்டும். இடது கையை மடக்கி, காதின் அருகே வைத்தபடி, இடது புறம் உடலை வளைக்க வேண்டும். கழுத்தை வளைக்கக் கூடாது. பழைய நிலைக்குத் திரும்பி, கெட்டில்பெல்லை இடது கையில் பிடித்தவாறு வலது புறம் செய்ய வேண்டும். இது ஒரு செட். இப்படி மூன்று  முறை செய்யலாம்.

பலன்கள்: முன் கைகள், மேல் உடலில் உள்ள உட்புற, வெளிப்புறத் தசைகள், வயிற்றுப் பகுதி இறுக்கமாகும்.

சைடு கிரவுண்டு டச் வித் வெயிட் (Side ground touch with weight)
இரு கைகளிலும் டம்பெல்லைப் பிடித்தபடி, கால்களை அகட்டிவைத்து நேராக நிற்க வேண்டும். முன்புறம் உடலை வளைத்து, வலது கையில் உள்ள டம்பெல்லைக் கொண்டு இடது பாதத்தைத் தொட வேண்டும். இடது கை, டம்பெல்லுடன் உடலோடு ஒட்டி இருக்க வேண்டும். பிறகு, நிமிராமல் இடது கையில் உள்ள டம்பெல்லை கொண்டு வலது கால் பாதத்தைத் தொட வேண்டும். இது ஒரு செட். இப்படி, மூன்று முறை செய்ய வேண்டும்.

பலன்கள்: உடலின் பின் புறத் தசைகள், கை, இடுப்பு வலுவடையும். பக்கவாட்டுத் தொடை தசையான க்ளுட்ஸ், ஹேம்ஸ்ட்ரிங்க்கான நல்ல பயிற்சி.

சைட்ஸ் ஓவர் ஹெட் டம்பெல் ரைஸ் (Sides over head dumbbell raise)
வலது கையில் டம்பெல்லைப் பிடித்தபடி, கால்களை அகட்டி நேராக நிற்க வேண்டும். இடது கையைத் தலைக்கு நேராக உயர்த்த வேண்டும். வலது காலைச் சற்றுத் திருப்பி, வலது கையில் உள்ள டம்பெல்லை இடது கையில் படும்படி வைக்க வேண்டும். இதே போன்று வலது புறமும் செய்ய வேண்டும். இப்படி மூன்று முறை செய்ய வேண்டும்.

பலன்கள்: கைகளை வலுப்படுத்தும். இடுப்பு மற்றும் தோள்பட்டை தசைகள் வலுப்பெறும்.

கிராஸ் கிரெஞ்ச் (Cross crunch)
கால்களை அகட்டி, நேராக நிற்க வேண்டும். வலது கையை காதின் அருகே வைத்தபடி இடது காலை மடக்கி இடுப்பு உயரத்துக்குத் தூக்க வேண்டும். முதுகு வளையக் கூடாது. பழைய நிலைக்குத் திரும்பி இதே போன்று இடது புறமும் செய்ய வேண்டும். இப்படி மூன்று முறை செய்ய வேண்டும்.  

பலன்கள்: 
பின் முதுகுப் பகுதியில் உள்ள கொழுப்பைக் கரைக்கும். தசைகளை உறுதிப்படுத்தும். கீழே படுத்து செய்யும் பயிற்சிகளைவிட இந்தப் பயிற்சியால் வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

ஸ்டாண்டிங் ட்விஸ்டர் (Standing twister)
மெடிசின் பாலை, கையில் பிடித்தவாறு, கால்களை சற்று அகட்டி நிற்க வேண்டும். கைகளை உடலுக்கு முன் நீட்ட வேண்டும். பின் உடலைத் திருப்பாமல், வளைக்காமல் கைகளை இடது புறம் திருப்ப வேண்டும். பழைய நிலைக்கு வந்து அதேபோல் வலது புறம் நீட்ட வேண்டும். இது ஒரு செட். இப்படி மூன்று முறை செய்ய வேண்டும்.

பலன்கள்: வெளி மற்றும் உள் ஆப்ளிக்ஸ் தசைகளை மெலியச் செய்யும். வயிற்றுப் பகுதியில் உள்ள அழுத்தத்தைக் குறைக்கும்.

சைடு கிரெஞ்ச் (Side crunch)
கால்களை அகட்டி, நேராக நிற்க வேண்டும்.வலது கையை மடக்கி, காதின் அருகே வைக்க வேண்டும். இடது கை உடலோடு ஒட்டி இருக்கட்டும். இப்போது, உடலை வலது புறம் வளைத்து, பழைய நிலைக்குத் திரும்பி, வலது புறம் செய்ய வேண்டும். இப்படி மூன்று முறை செய்ய வேண்டும்.

பலன்கள்: வயிற்றின் பக்கவாட்டில் உள்ள எக்ஸ்டர்னல் ஆப்ளிக்ஸ், இன்டர்னல் ஆப்ளிக்ஸ், வயிற்றுத் தசைகளுக்கு நல்ல பயிற்சி.

வீட்டுத்தோட்டம் அமையுங்கள் இப்படி

“வீட்டுத்தோட்டம் அமையுங்கள் இப்படி!”

ஞ்சில்லாத காய்கறிகளை நாமே உற்பத்தி செய்துகொள்ளும் வகையில், தற்போது மாடித்தோட்டம் பரவலாகி வருகிறது. குறிப்பாக மாநகர, நகரப் பகுதிகளில் பரவலாகி வரும் மாடித்தோட்டங்கள் வீடுகளின் காய்கறித் தேவையை கணிசமாக நிறைவு செய்து வருகின்றன. இயற்கை ஆர்வலர்கள், இல்லத்தரசிகள், விவசாயம் சார்ந்த ஆர்வமுள்ளோர் எனப் பலரும் மாடித்தோட்டத்துக்கு மாறி வருகின்றனர். மாடித்தோட்டம் அமைக்க விரும்புபவர்கள், கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து வல்லுநர்கள் கூறிய விஷயங்கள் இங்கே இடம்பிடிக்கின்றன.

மாடித்தோட்டத்தில் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த எக்ஸ்னோரா அமைப்பைச் சேர்ந்த பம்மல் இந்திரகுமார், “நடவு செய்யும்போது, மண்ணுடன் மாட்டுச் சாணத்தை கலந்து விதைத்தால், செடிகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். காலையிலும், மாலையிலும் மாடித்தோட்டத்தைப் பராமரிப்பதே நமக்கு சிறந்த உடற்பயிற்சியாக இருக்கும். குழாய் மூலம், தண்ணீர் விடும்போது அதிகம் வீணாகும். இப்படி அதிகமாக ஊற்றப்படும் தண்ணீரோடு உரச்சத்துக்களும் வெளியேறி விடும். இதனால், குறைவான அளவில் மண்ணை ஈரப்படுத்தும் அளவு மட்டுமே தண்ணீர் கொடுக்க வேண்டும். ஈரமான மண்ணோடு கூடிய மாடித்தோட்டப் பைகளை தரையில் நேரடியாக வைக்கும்போது, தளம் எப்போதும் ஈரமாகவே இருக்கும். இதனால் மாடியின் மேல்தளம் பழுதடைய வாய்ப்புண்டு. அதில் கவனம் தேவை. 

செடிகளுக்கு பஞ்சகவ்யாவைப் பயன்படுத்தினால் செழிப்பாக வளரும்.  அறுவடை முடிந்த பிறகு ஒரு வாரம் தொட்டியைக் காய விட்டு மீண்டும் நடவு செய்ய வேண்டும். ரசாயன உரங்களைத் தவிர்க்க வேண்டும். நாட்டு விதைகளைப் பயன்படுத்துவது நல்லது. பஞ்சகவ்யா, சூடோமோனஸ்... போன்ற இயற்கை இடுபொருட்கள் தமிழ்நாட்டில், பரவலாக விற்பனை செய்யப்படுகின்றன.
வீட்டுத்தோட்டம் அமைப்பது என்பது, ஒவ்வொருவரின் அனுபவம், ஆர்வத்துக்கு தக்கப்படி மாறுபடும். விதைகளை மண்ணில் விதைத்த நாள் முதல் இயற்கையை உன்னிப்பாக கவனித்து வந்தால், நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும். இப்படி கற்றுக் கொள்வதன் மூலம், மாடித்தோட்ட விவசாயத்தில் நீங்களே நிபுணராகி விடுவீர்கள். முயற்சியும், அதை சார்ந்த கற்றுக்கொள்ளும் பயிற்சியுமே நம்முடைய தேவை” என்றார்.

சென்னை, ஆழ்வார்திருநகரில் மாடித்தோட்டம் அமைத்திருக்கும் சுப, “தக்காளி, கத்திரி, மிளகாய் போன்றவற்றை குழித்தட்டில் நாற்று விடும்போது, ஒரு குழிக்கு ஒரு விதை வீதம்தான் விதைக்க வேண்டும். நாற்றுகளைத் தயார் செய்ய கொட்டாங்குச்சிகளையும் பயன்படுத்தலாம். குழிகள் 2 அங்குலத்தில் இருந்து 5 அங்குலம் வரை ஆழம் கொண்டவையாக இருக்க வேண்டும். நாற்று வளர்க்கும் குழித்தட்டு அல்லது கொட்டாங்குச்சியில் அதிகப்படியான நீர் வெளியேற துளை இருக்க வேண்டும். அதிகப்படியான நீர் இருந்தால், வேர்கள் அழுகி விடும். குழிகளில் மாட்டு எரு, செம்மண், தென்னை நார் ஆகிய மூன்றையும் கலந்து நிரப்பி விதைக்க வேண்டும்.
வளர்ந்த நாற்றுக்களை ஒரு தொட்டி அல்லது ஒரு பைக்கு இரண்டு நாற்றுகள் வீதம் நடலாம். பைகளில் மாட்டு எரு, செம்மண், தென்னை நார் ஆகிய மூன்றையும் கலந்து நிரப்பும்போது விளிம்பில் இருந்து ஒரு அங்குலம் இடைவெளி இருக்குமாறு நிரப்ப வேண்டும். இந்தப் பைகளின் அடியிலும் துளைகள் அவசியம். 

தேமோர்க்கரைசல், வேப்பம் பிண்ணாக்குக் கரைசல் ஆகியவற்றை வாரம் ஒரு முறை மாற்றி மாற்றி தெளித்து வந்தால், வளர்ச்சி ஊக்கியாகவும், பூச்சிவிரட்டியாகவும் செயல்படும். நிலத்தில் விளையக்கூடிய காய்கறிகளை விட மாடித்தோட்டத்தில் விளையக்கூடிய காய்கறிகளுக்கு நோய்த்தொற்று குறைவாகத்தான் இருக்கும். ஒரு செடியில் ஒரு சுற்று அறுவடை முடிந்தவுடன்... மண்ணில் சிறிது வேப்பம் பிண்ணாக்கு இட்டு இரண்டு நாட்கள் காய வைத்து மீண்டும் பயன்படுத்தலாம். அறுவடை செய்யும்போது... தக்காளியை நன்கு பழுத்த நிலையிலும், அவரை, வெண்டை, கொத்தவரை, கத்திரி போன்றவற்றை இளம் காயாக இருக்கும் போதும் பறிக்க வேண்டும்” என்றார்.

தொடர்புக்கு,
இந்திரகுமார்,
செல்போன்: 994100-07057.
சுபஸ்ரீ,
செல்போன்: 96771-01627
மாடித்தோட்டம்...கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்!

தமிழ்நாட்டில் ஏப்ரல், மே மாதங்கள் தவிர, அனைத்து மாதங்களிலும் வீட்டுத்தோட்டம் அமைக்கலாம்.

பாலிதீன் விரிப்பின் மேல் தொட்டிகளை வைத்தால், தரையில் ஈரக்கசிவு இருக்காது.

கொட்டாங்குச்சிகள், மண் மற்றும் சிமெண்ட் தொட்டிகள், பாலிதீன் பைகள், வீட்டைச் சுற்றியுள்ள நிலம் ஆகியவற்றில் செடிகளை வளர்க்கலாம்.

மாடித்தோட்டம் அமைக்க தேர்ந்தெடுக்கும் இடம்... தினமும் 6 மணி நேரம் சூரிய ஒளி படும் இடமாக இருக்க வேண்டும். மாடி, மாடிப்படிகள், ஜன்னல் ஓரங்கள் என எங்கு வேண்டுமானாலும் செடிகள் வளர்க்கலாம்.

தொட்டிகள், பைகளில் ஒரு பங்கு வளமான செம்மண் அல்லது வண்டல் மண், ஒரு பங்கு மணல், ஒரு பங்கு தொழுவுரம் ஆகிய மூன்றையும் நன்றாகக் கலந்து, தண்ணீர் தெளித்து நடவு செய்ய வேண்டும்.

தயார் நிலையில் கிடைக்கும் தேங்காய்நார்க்கட்டிகளோடு கூடிய செடி வளர்ப்புப் பைகளில்... 2 கிலோ தேங்காய்நார்க்கட்டிக்கு 10 லிட்டர் தண்ணீர்  என்ற விகிததத்தில் ஊற்ற வேண்டும். நன்கு ஊறிய பிறகு, 2 கிலோ தொழுவுரம், தலா 10 கிராம் பாஸ்போ-பாக்டீரியா, அஸோஸ்பைரில்லம்,  சூடோமோனஸ், டிரைக்கோடெர்மா விரிடி ஆகியவற்றைக் கலந்து நன்றாகக் கிளறி பிறகே நடவு செய்யவேண்டும்.

மாடித்தோட்டத்தில் நாட்டு விதைகள் பயன்படுத்துவது நல்லது. நாட்டு விதைகள் கிடைக்காத பட்சத்தில், கலப்பின வீரிய ஒட்டு ரக விதைகளையும் பலர் பயன்படுத்தி வருகிறார்கள். தோட்டக்கலை துறை மூலம் வீரிய ஒட்டு ரக விதைகள்தான் வழங்கப்படுகின்றன.

கத்திரிக்காய், மிளகாய், தக்காளி, காலிஃப்ளவர், முட்டைகோஸ், நூக்கல் உள்ளிட்ட பயிர்களை நாற்று விட்டுத்தான் நடவு செய்ய வேண்டும். அப்போதுதான் காய்ப்பு நன்றாக இருக்கும்.

வெண்டை, முள்ளங்கி, கொத்தவரை, செடி அவரை மற்றும் கீரை வகைகளுக்கு விதைகளை ஓர் அங்குல ஆழத்தில் நேரடியாக விதைக்கலாம்.

மாடித்தோட்டத்தில் பயிர்களின் ஊட்டத்துக்கு பஞ்சகவ்யா, மீன் அமினோ அமிலம், அமுதக்கரைசல் இதில் ஏதாவது ஒன்றை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 மில்லி என்ற கணக்கில் பயன்படுத்தலாம்.

தேவையற்ற களைகளை அவ்வப்போது அகற்ற வேண்டும். செடிகளில் நோய் தொற்று ஏற்பட்ட பகுதிகளையும் அப்புறப்படுத்துவது நல்லது. 

நோய் மற்றும் பூச்சித்தாக்குதலில் இருந்து பாதுகாக்க...வேப்பெண்ணெய், வேப்பங்கொட்டைக் கரைசல், இஞ்சி-பூண்டுக் கரைசல், புகையிலைக் கரைசல், இதில் ஏதாவது ஒன்றை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி என்ற கணக்கில் பயன்படுத்தலாம்.

காலை, மாலை வேளைகளில், மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து லேசாக  தண்ணீர் தெளித்தாலே போதுமானது. தொட்டிகளில் தண்ணீர் தேங்கக்  கூடாது. மழைக் காலங்களில் போதுமான ஈரம் இருப்பதால், செடிகளுக்கு நீர் ஊற்ற வேண்டியதில்லை.

இயற்கை அங்காடிகளில் விசாரித்தால், இயற்கை உரங்கள், நாட்டு விதைகள் கிடைக்கும். மாநகரப் பகுதியில் உள்ள பெரிய சூப்பர் மார்க்கெட்கள், தோட்டக்கலைத்துறை அலுவலகங்களில் மாடித்தோட்ட உபகரணங்கள், இடுபொருட்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. தேமோர்க் கரைசல், மீன் அமிலத்தை வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம். வேப்பெண்ணெய் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

தொட்டி, பைகளில் ஒரே மாதிரியான பயிர்களை திரும்பத் திரும்ப வளர்க்காமல் சுழற்சி முறையில் மாற்றி மாற்றி வளர்ப்பது நல்லது. இதனால் மண்ணில் சத்துக்கள் நிலைநிறுத்தப்படும்.

அறுவடை முடிந்த பிறகு, செடியை வேரோடு பிடுங்கிவிட வேண்டும். 

சாணம், மாட்டுச் சிறுநீர் கிடைக்கும் வாய்ப்புள்ளவர்கள் பஞ்சகவ்யா, அமுதக்கரைசல், இஞ்சி-பூண்டுக் கரைசலை வீட்டிலேயே தயார் செய்து கொள்ளலாம். மாநகர பகுதிகளை ஒட்டி கோசாலைகள் செயல்படுகின்றன. அங்கே அணுகினால் இந்த சாணம், மாட்டுச் சிறுநீர் கிடைக்கும். சில கோசாலைகள் பஞ்சகவ்யா, மண்புழு உரம், தொழுவுரத்தை நேரடியாகவும் விற்பனை செய்து வருகின்றன.